cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

கவிஜி கவிதைகள்

கவிஜி
Written by கவிஜி

புத்தம் புது சித்தார்த்தன்

கண்கள் மூடி கழுத்து சாய்ந்து
ஒரு சிற்பத்தைப் போல
அமர்ந்திருக்கிறாய்
மிக சிறிய கனவை
மேலே மேலே
காண்பது போல அது
இன்னும் வார்த்தை செய்கிறேன்
ஒரு ஈஸ்ட்மென் திரையை
நகர்த்தவியலா அனுபவத்தோடு
காண்கிறேன் எனவும்
நான் காணும் கானகத்தில்
பூத்து காய்த்து உதிர மறுக்கும்
ஒரு திவ்விய தோரணை நீ
தோகையற்றும்
சீறி பறக்கும் கற்பனைக்கு
கௌரவம்
அதை விடாமல் காண்பது தான்
ஒருவேளை தவம் இதுவென
இருக்கலாம்
அழகூறிய பொறுப்பு துறப்பு
செய்து பார்க்கிறேன்
கனி முளைத்த கண்களில்
புத்தனுக்கு பதில்
புத்தம் புது சித்தார்த்தன்

மறுக்கவே பார்க்கிறேன்

மறுத்து பார்க்கிறேன்
மாற்றியும் தான்
மாறுதலுக்கு உட்படுதல் உட்பட
கலைத்து போட்டு கவனிப்பதில்
திளைத்தல் உண்டு
சரிந்துருளும் நிமிர்ந்த நிலை

எனும்போது

ஒவ்வொரு சொல்லிலும் சிரிப்பு
நிற்க நில்லாமை நிரம்பி வழிந்து
மீண்டும் உரிந்து காய்ந்து
முதல் துளிக்கு
நாக்கு வேர்க்க நில்
நல்லதின் அவசியம்
நயவஞ்சக கரிசனத்தில்
நிகழ்கிறது
வடிவம் கொண்டலையும்
புதிர் கோணத்தின் சுயம்
மது போத்தலில்
தற்காலிகம் நிகழ்த்துகிறது
மளமளவென உடைந்து நொறுங்கி
சில் சில்லாய் கிடப்பதில் தான்
எத்தனை சித்திரம்
எத்தனை விசித்திரம்
ஆழ் போதையில் விசுக்கென
விழிப்பு வருகிறது
மறந்து பார்த்ததை
மறுக்கவே பார்க்கிறேன்.

கவிஜி

About the author

கவிஜி

கவிஜி

கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website