- யாவுமாகி நின்றாய்.
பார்வையின் பரவசத்திற்காக
எதையும் இழக்கத் தயாராகவே இருக்கின்றேன்
நிச்சலனமற்ற இக்கணத்திற்காக.
பற்றிய விரலை விடுவிக்க வேண்டாமென
கெஞ்சிக் கிடக்கின்றேன்
ஸ்பரிச சுகத்தில் லயித்து.
யாவும் மறந்ததொரு
என் கிரக்க நிலையில்
உதட்டசைவால்
ஒன்றை
உதிர்க்கின்றாய்
உமிழ்நீர் வழிய
பச்சை சமிக்ஞையொன்று
பாதையைச்
சீராக்கும் பொழுதினில்.
கந்தலாடையுடுத்தி
கசங்கிய தாயின் மடியில்
கமலும் உன்னை
வீதியிலிறங்கி
தூக்க முடியாமல்
கண்கள் மூடியே
கடக்கின்றேன்.
வீணானவொன்றென்னை
வீழ்த்தி இருப்பதால்.
- கற்றும் மறக்கவியலாத கனவுகள்.
சிரிப்பால்
சீர்கெட்டதைப் பற்றியதொரு
சுய விவரணை குறிப்புகளொன்றை
எழுதலாம்
சுயசரிதையெனப்
பிறர் மேம்படுமாறு.
எச்சிரிப்பிலிருந்து
தொடங்குவதென்பதில்தான்
கழிகிறது
பொழுதுகள்
அவர்களுடன்
வாழப் பழக்கி.
- குப்பைகள் சூழ்ந்தவொரு குன்றிமணி.
அசௌகரியப்பூக்களால்
தொடுத்த மாலையைத்தான்
அவ்வப்பொழுது
அனுப்புகின்றேன்
மிகுவாகிய
பேரன்பின்
வெளிப்பாட்டில்
கொய்து
கூர்த்தீட்டுமுன்
ஆயுத யுக்தி
அறிந்தே.
வலுவேறிய
கேடயமொன்றிருக்கிறது
பாரம்பரியமாகக்
கைமாறி
முனை மழுங்க
வைக்கப் பணித்து..
அரிதென
மாறுமொரு
நிகழ்வாகக்
காத்துக்கிடக்கிறது
உனக்கான இருக்கை
எப்பொழுதும்
உன் வரவை
எதிர்நோக்கி
எனக்குள்
மகிழ்வான தருணத்தை மட்டும்
மறந்திடாமல்
நினைவூட்டி.