cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 27 கவிதைகள்

நீலவண்ணச் சொற்கள்


தழ் பிரித்து
நீ சொல்ல முயலும்
ஒவ்வொரு பிழையான
உச்சரிப்பிற்கும் பின்னே
ஒளிந்திருக்கும் வார்த்தைகள்தான்
எனது இதுநாள் வரையிலான உலகம்.

உறங்கும் எனது கண்ணிமைகளை
மென்மையாகத்
தொட்டுத் திறந்து
நீ உளறிவிட்டு ஓடும்
இடைவெளியில்தான்
நான் முழுமையாக
வளர்ந்தேன்.

உனதறையில்
நீ சேமித்து வைத்திருக்கும்
நீலவண்ணச் சொற்கள் அடங்கிய
ஆல்பம்தான்
எனது உயிர்த்தடாகம்.

நீ தெளிவாகப் பேச
இன்னும் பல வருடங்கள்
ஆகும் என்கிறார்கள்
வருத்தம் தொய்ந்த முகத்துடன்.

எனக்கென்னவோ
புரியாத உன் அடுக்கற்ற
சீரற்ற மொழியில்தான்
நான் என்னென்னவோ
புரிந்து கொள்ளத் துவங்கினேன்.

நீ நீயாக
வளர்ந்து வா.
எனக்கொன்றும் அவசரமில்லை.


 

About the author

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்

மலேசியாவிலுள்ள கடாரம்(கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன்; 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். பன்முக நவீனப் படைப்பாளியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கவிதைகள் என இதுவரை பதினேழு நூல்கள் இயற்றியுள்ளார்.

சிறார் இலக்கியத்திலும் பங்களித்துவரும் பாலமுருகன் இதுவரை சிறார்களுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதைகள், நான்கு சிறார் நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் குறும்படங்கள், சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூல்கள் படைத்திருக்கிறார். இவருடைய ‘பேபிக் குட்டி’ என்கிற சிறுகதை தமிழ்நாட்டு அரசின் மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத்தமிழ்’ என்கிற அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் பாடமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கலை, இலக்கியத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவருடைய முதல் கவிதை தொகுப்பு ' கடவுள் அலையும் நகரம்' சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பத்தால் 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website