நெகுதி
நீரோடிய வழித்தடங்களின் வெறுமைக்கு பின்னும்..
எஞ்சியிருக்கும் நீர்மத்தில்
பூத்திருக்கும் மஞ்சள் பூக்களாய்,
பிரிந்த பின்னும் அழிக்கவியலாத
நினைவுச்சுருளின் நெகுதிகளாய்,
உறைந்துபோன புன்சிரிப்போடு
மிஞ்சியிருக்கிறது ஓர் புகைப்படம்.
கூடுதல் இலை மரத்துக்கு பாரமென,
இலை உதிர்க்கும் மரங்களாய்,
ஏதேனும் ஒருகாரணம் சொல்லி எளிதாய் தவிர்த்துவிடுகிறீர்கள்..
குடிகார கணவனிடம் மறைத்து வைத்த சிறுவாட்டுக்காசாய்,
ஒவ்வொரு நினைவுப்பானைக்குள்ளும்
கையை விட்டு,
ஞாபகங்களைத் துழாவி
ஏமாந்துகொண்டிருக்கிறேன்.
அரண்மனை விட்டு,
ஆடம்பரம் தவிர்த்து,
காதல் விடுத்து,
காமம் தடுத்து,
அகவைகள் தீர,
போதி மரம் வேண்டியிருந்தது ஞானம் பெறப் புத்தனுக்கு…
எவ்விரவில் அவளைத்தனியே தவிக்க விட்டானோ.
அக்கணமே
நிறைஞானம் கிடைக்கப்பெற்றாள் யசோதரா!
ஆசை ஒழித்தல் தான் அடிப்படையெனில்,
அதை வேறுவழியின்றி வாய்க்கப்பெற்றவள் தான்
நிறை ஞானி.!
பளபளப்பின் உச்சத்தின்
கவனத்தின் தூக்கலில் கொண்டாடித்தீர்தலுக்குப்பின் தூக்கி எறியப்பட்டு
என்ன செய்வதெனத் தெரியாமல்
குழம்பித் தவிர்க்கும் பழைய அந்தக்காலத் தொலைக்காட்சி பெட்டியைப்போல்,
ஒவ்வொரு பேருந்து நிலையத்தின் மிக அருகில் நின்றுகொண்டிருக்கிறது
வர்ணங்கள் உதிர்ந்து சன்னல்கள்,
உடைந்து..
கதவுகள் குறுக்கு மறுக்காகச் சாய்த்து வைக்கப்பட்ட கட்டிடம்
ஊரின் ஜொலி ஜொலிப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல்,
வீட்டின் ஆரம்பக் கால முதல் மருமகளாய்
உழைத்து, உற்சாகமிழந்து நிற்கும் அக்கட்டிடத்தின் முன்பு…
காலம் கைக்கட்டி காத்திருக்கிறது.
எத்தனை பிரம்மாண்டமாயினும்
காலத்தின் முன்பு
காற்றில் பறக்கும் கரித்துகளாய்,
கண்கள் உறுத்த உறுத்தப் பறந்துதானே ஆகவேண்டும்.
Art Courtesy : Yandex.ru