ஒவ்வொரு முறையும் உன் மீது கொண்ட
என் பழைய காதலை ஒரு கையிலும்
புதிதாக ஏற்பட்டுவிட்ட வெறுப்பினை மறு கையிலும்
ஏந்திக் கொண்டு
உன்னை எதிர்கொள்வது இயலாததாய் இருக்கிறது சகி.
ஒரு காதலனும் காதலியும்
தங்களுக்கு இடையிலான
பிரிவினைத் தாண்டி
வேறு என்ன பெரிய பரிசினை
தங்களுக்குள் பரஸ்பரம் அருளிக் கொள்ள முடியும்.
இருப்பினும், நான் அதன் பிறகும்
ஏதோ ஒன்றின் நிமித்தம்
ஒரு நித்ய வெறுப்பினை நமக்கே நமக்காக அளித்தது மட்டும்
ஒரு மறுக்க முடியாத வாஸ்தவம்தான்…
–
இனியும் சுமக்க முடியாத
அந்தப் பாரத்தை இறக்கி வைக்கத் தோதாய்
என் முன்னே விடிகிறது
உனக்கே உனக்குப் பிடித்த
அந்த ஞாயி(ற்)றுடன் ஒரு நாள்…
நானோ உனக்கு மேலும் பிடிக்கும்
யானைகளாலான ஒரு புதுச் சட்டையைப் போட்டு வந்து
உன் முன்னே நின்றேன்; எதையும் பேசாமல்.
அந்தத் தருணம், நீ துணுக்குற்றாய்;
உள்ளூர ரசித்தாய்;
என் பாரமும்
உன் பாரமும்
நம் பாரமும் அடை மழை
ஓய்ந்த பிறகுச் சிந்தும்
மழைச் சொட்டுகளைப் போல
விழுந்து கரைந்தன வெளியில்…
மேனி மீதிருந்த யானைகளோ
லேசாகி மிதந்தன நித்தியத்தில்…
**
வண்ண வண்ண நிறங்களாலான யானைகளை
உனக்காக நான் சுமந்து வருகிறேன்
என் சட்டையில்
அவ் வேழங்களின் சின்னச் சின்னத் தந்தங்களும்,
சன்ன சன்ன துதிக்கைகளும்,
மௌனமான பிளிறல்களும்
நமக்கிடையில் விலகலின் காரணங்களைத்தான்
இன்னமும் கதைத்துக் கொண்டிருக்கின்றனவா; சகீஇ???
**
என் சட்டையின் யானைகள்…
உன்னை நினைத்து ஏங்கும் போது
என் மேனியைத் தீண்டும் உன் பருவ
இதழ்களாகவும்,
உன்னை நினைத்துக் கேவும் போதோ
மென் தோல் வெடிப்புற்று எரிச்சல் தரும்
புண்களாகவும் ஸ்திதி மாறுகின்றன…
அதே யானைகள்தான்
என் மேனியின் மீது நடக்கும் போது லேசாகவும்
கழற்றி அப்புற வைக்கும் போது,
என் அறையையே தாழ்த்தும் கனமாகவும் மாறுகின்றன…
நீ சொல், நமக்கிடையே நாம் வேண்டுவது நேசமா.. பிரிவா…
சந்தேகத்திற்கு இடமில்லாமல் இரண்டும்தான் இல்லையா சகீஇ…
**
உனக்கு யானைகள் என்பவை என்ன சகி…??
ஊர்ஜிதமாகச் சொல்ல முடியாவிட்டாலும்
நிச்சயம் என் சட்டை வண்ண யானைகள் மட்டும்
நம் காதலின் சுவடுகள் என்பதை
தீர்மானமாகவே இருவரும் அறிவோம் இல்லையா; தோழீஇ??