cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 32 கவிதைகள்

வில்வரசன் கவிதைகள்


  • ஒரு மலரின் ஆயுள்

பூ மலர்கிறது
இன்னும்
கண்விழிக்கவில்லை இதழ்கள்.
நீரூறிய வேர்கள் தட்டிக்கொடுக்கின்றன மௌனமாய்.
காற்று போர்த்திச்செல்கிறது
பாராட்டுச் சால்வையொன்றை
புது மலருக்கு

பூ புன்னகைகிறது
நறுமணம் பரவுகிறது
கவிஞர்களின் எழுதுகோல்களை
மைக்குப்பிகள் நிரப்பிக்கொள்கின்றன
விரிந்த இதழ்களில் ஆலிங்கணிக்கும்
வண்டுகளின் தேகத்தில் ஒட்டிக்கொள்கிறது நறுமணம்

நேரம் கடக்கிறது
களையிழந்து உதிர்கிறது மலர்
வண்டுகளும் காற்றும் கவிஞர்களும் நினைவு வைத்துக்கொள்கின்றனர்
மலரின் ஓர் நாளை
அவ்வளவு தான்.


  • செல்பிஷ் இராமாயணா.

பேரூடலுக்குப் பின் சந்தித்துக்கொள்கையில்
இராமனின் கற்பை
நிரூபிக்கக் கட்டளையிடுகிறாள் சீதை

தடுமாறியபடியே
தன் கையிலிருக்கும்
செல்போனைக் கையளிக்கையில்
முத்தக்குறிகளை வாரியிறைத்து
வாட்ஸாப்பில் சிரிக்கிறாள்
சூர்ப்பணகை

நெடுநாளைக்கு முன்னர்
சபரியுடனான இரவுணவில்
சந்தோசமாய் கிளிக்கிய
செல்ஃபிப் புகைப்படம்
சிக்கிக்கொள்கிறது கலரியில்

தாரையின் புகைப்படமொன்றிற்கு
“வாவ், அற்புதமென்று ”
கமெண்டிட்ட கவிதையொன்று பேஸ்புக்கில் பல்லிளிக்கிறது

இத்தனைக்குப் பிறகும்
இன்னும் என் புகைப்படம்தானா?
உம் டிபி யில் இருக்கிறதென
செல்லமாய்
கடிந்துகொள்கிறாள் சீதா


 

About the author

வில்லரசன்

வில்லரசன்

சர்வேஷ்வரன் வில்லரசன் - பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை இறுதி ஆண்டு மாணவர். இலங்கை கிளிநொச்சியைச் சார்ந்தவர். 2023 ஆண்டு "பசி உறு நிலம்” எனும் கவிதைத்தொகுதியை வெளியீடு செய்து உள்ளார்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website