cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 34 கவிதைகள்

வருணன் கவிதைகள்

வருணன்
Written by வருணன்

காத்திருந்தே ஆகவேண்டிய தருணத்தில்
இலக்கற்ற காலத்தை வைத்து
சூதாடத் துவங்கினோம்
வரவேற்பு மேசையின் மேலே
தன்னையே சுற்றும் பறவையென
சுழன்ற நொடிமுள்ளுடன்…
விரயமாகிக் கொண்டிருக்கும் காலத்தை
காலடியிலிட்டு நசுக்கியபடி மெல்லொலி எழுப்பிய
கொலுசிசையைக் காட்டிலும்
அருகிருந்த என் கரத்தை
பியானோ கட்டைகளாக்கி
நீ வாசித்தபடியிருக்கிற
பிறர் கேளா இசையே
பேரானந்தம்.

தூரத்தில் பொழியும் மேகம் பார்த்து
அது காற்சட்டையெனவும்
அதற்குள் கால்நுழைத்து
நிலமிறங்குகிறது மழையென்றாள் பாட்டி
ஏனோ அக்கணம்
என்றோ
மழையென்பது கடவுள் கழிக்கும் சிறுநீரெனத்
தாத்தா சொன்னதும் நினைவுக்கு வர
அன்று நான் மழையில் நனையவேயில்லை.

கால்கள் பரப்பி அடைத்துக் கொண்டு
படுத்துக் கிடக்கிறதொரு பகற்கனா
பணிகளிருப்பதாய் அதட்டியும்
அசைவதாயில்லை
புரளக் கூட மறுத்து அழிச்சாட்டியம்
கொஞ்சம் இடங்கொடுத்தால் இப்படித்தான்
‘இருஇரு’வெனப் பொறுமிக் கொண்டான்
கோபம் வருகையிலெல்லாம்
உறங்கிடும் வழக்கமுடைய அவன்.

நிலந்தீண்டா நிழலென
தனக்கான சுருதியில்
தன் ராகத்தை இசைத்தபடியே மரணம்
வாழ்வதன் சுருதியில்…
சில திருப்பங்களில் புணர முனைந்து
அபசுவரங்களாய் பிசுபிசுத்திட
ஏதோ ஓர் மழையிரவின் குளிர் நொடியில்
எங்கோ ஓர் அகால விபத்தில்
வாழ்ந்து சலித்த பழுத்த இலையுதிர்வில்
உயிர்த்திருக்கும் ஆசை இறுதியாய் வடிகின்ற கணத்தில்
சுருதிகள் முயங்கும்.


கவிதைகள் வாசித்த குரல்:
வருணன்
Listen On Spotify :

About the author

வருணன்

வருணன்

இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.

இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website