cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 27 கவிதைகள்

மூன்று கவிதைகள் – கவிஜி

கவிஜி
Written by கவிஜி

  • காலத்தின் இதயம் யாசிக்கிறான்

பாதி வயலில் நிற்பவனுக்கு
ஆதி பச்சையை
யோசிக்க தெரிகிறது

ஆழமாய் சுவாசித்து விட்டு
காலத்தின் இதயம் யாசிக்கிறான்
கண்படும் தூதென மழைக்காலம்

மேய்ந்தவைக்கு எல்லாம் தெரியும்
புல் நுனி பனி துளி நெல்மணி என
நிலமுனி சித்திரத்தை
அசை போடுகிறது

இட்டேரி நுழைந்து
வானம் நிறைக்க பறந்து வரும்
பறவைக்கு
மனிதனுக்கும் சேர்த்து தான்
பசிக்கிறது

துளி தப்பினாலும் முளைத்து விடும்
விதையொன்றில் வளர்ந்தது தான்
பூமி என்கிறேன்
சந்தேகமெனில் நீரூற்றி பாருங்கள்


  • வெண்ணிற இரவன்

உனக்கிருந்த நடுக்கம்
நானும் உணர்கிறேன்
உன் தலை கீழ் விகிதங்கள்
எனக்கும் ஒத்து போகிறது
காதலின் போத்தலின் வழியே
நீ சென்றடைந்த அதே
தூரங்கள் என் வசமாகின்றன
உன் தாடி உன் அன்னா என
எனக்கும் என் தாடி என் பெண்
நடந்தும் ஓடியும்
தவித்தும் கவிழ்ந்தும்
மீள முடியாத துயரத்தை
கைக்கொண்டலைவது
மிகு புனைவு தான்
உனக்கும் இப்போது எனக்கும்
செத்து போக பயந்ததில்லை
அதே நேரம் வாழ்ந்து விடவும்
பயந்ததில்லை
உனக்கு வோட்கா
எனக்கு பியர்
மலைகளின் வளைவுகளில்
பயணம் விடுத்து
மயங்கி கிடக்க ஆசீர்வதித்த
உன்னை வணங்குகிறேன்
நான் எழும் வரை
உன் வெண்ணிற இரவே துணை


  • அது வேண்டட்டும்

வினைக்கு பின்னிருக்கும்
எதிர்
ஒரு திறவு

திறவில் இருக்கும் இருள்
மெல்ல சிலிர்க்கும்
ஒளி என கொள்க

உயரம் தாழ்வென
தாழ்வில் உயரமாக
சொல்லி கேட்டு
கேட்க சொல்வது அது

அரை வட்டத்திலிருந்து நகரும்
அரை வட்டம்
இன்னொரு வட்டம்

மீண்டு விட மீண்டும் விட
ஒன்றுக்கு இன்னொன்று
இன்னொன்றுக்கு ஒன்று

இது வேண்டும் எனில்
அது வேண்டட்டும்
அதுவும் வேண்டட்டும்

மறுமுறை
கண் சிமிட்டலுக்குள்
சிமிட்டா மனம் கொண்டு யோசி

நெருக்கமும் இல்லை
நெருங்காமலும் இல்லை
வினையும் எதிர்வினையும்


கவிதைகள் வாசித்த குரல்:
கவிஜி 
Listen On Spotify :

About the author

கவிஜி

கவிஜி

கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website