இப்படித்தான் முன்பொருமுறை
ஆத்திரத்தில் வீட்டின் கதவை
நிரந்தரமாகப் பூட்டிக்கொண்டு
உள்ளேயே இருந்துவிட்டேன்.
சிறு வெளிச்சம்
சிட்டுக்குருவியின் சத்தம்
கல்லெறிவோரின் கால்களைப்
பார்க்கவும் வேண்டாமென
கதவைப் பூட்டியவாறே
சன்னலையும் மூடிவிட்டேன் பின்பொருநாள்.
இருட்டிலும் முழுப் பொழுதையும்
சதுரமாய்..
செவ்வகமாய்..
முக்கோணமாய் சரிவர வெட்டி
உண்ணப் பழகியிருந்தேன்.
கதவினருகேயும் சன்னலினருகேயும்
ஏதோ லேசாகக் கேட்டது
உள்ளே பைத்தியம் ஒன்று இருக்கிறதென.
இன்னொரு குரலானது..
அதெல்லாம் இப்போது இறந்திருக்கும்
அது ஒரு பேயாகவோ,பூதமாகவோ
மாறியிருக்குமென்றது.
இதோ அடைக்கப்பட்ட சன்னலின்
சிறு இடைவெளியில்
மெதுமெதுவாய் உள்ளே வரும்
இந்த எறும்புக்கு அவன் சாயல்
இருந்தும் என்ன செய்ய?
அந்த எறும்பையும்தான்
நசுக்கிவிடுகிறேனே!
பைத்தியமா? பேயா? பூதமா?
நூலாம்படைக்குள் மறைந்து கொண்டிருக்கும்
விட்டத்தைப் பார்த்து
என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
~~~~~~~
எதையுமே சொந்தமாக்கிக் கொண்டால்தானே
சும்மா சும்மா அடிக்கத் தோன்றும்
உதைக்கத் தோன்றும்.
அதுவும் நம்மைக் குத்தும் குடையும்.
பேசாமல் எதையும் சொந்தமாக்காமல்
இரவல் எடுக்கவும்
பத்திரமாய்த் திருப்பிக் கொடுத்தும்
பற்றின்றி இருந்ததால்
என் வீட்டிற்கு வரும்
ஒத்தையடிப் பாதையில்
என் கால்களைத் தவிர
வேறு எந்த சுவடுமேயில்லை!
~~~~~~~
அதிர்ஷ்ட உண்டியல் நிரம்பும்வரை
அயராமல் காத்திருந்தாயிற்று.
மண் உண்டியலை ஓங்கியடித்து
உடைக்கும் ஆவலும் பெருகிவிட்டது.
இந்த முறையாவது
ஒரேயொரு வெற்றி நாணயம்
கிட்டிவிடுமென்று நம்பியிருக்கிறேன்.
இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு
கண்களை மூடியபடி
ஓங்கி உடைக்கிறேன்.
கண்கள் படபடத்தது போய்
இதயம் படபடக்கத் தொடங்கிவிட்டது.
கண்களைத் திறந்த வேளையில்
என் நம்பிக்கை சில்லுச்சில்லாய் உடைந்து
சில்லைரையாய்ச் சிதறியது.
தோல்விகளில் புரள்பவனுக்கு
வெற்றி ஒவ்வாதுதான்போல
அந்த உண்டியலுக்குத் தெரியாதது
ஒன்றுமில்லைதானே!