cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 27 கவிதைகள்

வெளிச்சம்

மிருணா
Written by மிருணா

அந்தியின் ஜீவன்
சொல்லில் அடங்காதது
ஒரு கள்வனைப் போல்
நிலம் நுழையும் அமைதி
தேர்ந்த மாயாவி போல
போர்த்தி விடுகிறது மாபெரும் இருளை
நான் இருளின் நுனியைத் தொட்டேன்
இருள் வெளிச்சமாக இருந்தது
அது வானில் முடிந்திருந்தது
என்னில் ஆரம்பித்திருந்தது.

எல்லாம் சரியாவென பார்க்க
வெண்ணிலா உலா வரும் முன்னிரவுப் பொழுதில்
சிவப்பு, நீல நட்சத்திர விளக்குகளை
ஒவ்வொன்றாய் ஏற்றிக் கொண்டிருக்கிறது வானம் –
நகரும் வீடுகளென மிதக்கும் மேகங்கள்
தம்முள் வெளிச்சத்தை ஏந்திக் கொள்ள.

இதயத்தில் மேகங்கள் இறங்கிய அவ்வேளை
நான் வெளிச்சமாக ஆகியிருந்தேன்.
நாளெல்லாம் பார்த்திருந்த
இந்த பிரபஞ்சத்தின் சோகங்கள்
நினைவெல்லாம் கோர்க்கப்பட்ட கண்ணீர்த் துளிகள்
வாசல் மணிச் சரமென காற்றில் சிணுங்கி
பின்னிரவின் அமைதியில் ஒவ்வொன்றாய் அமிழ
காற்று மகிழ்ச்சியை இலைகளில் எழுதி
இளஞ்செடியோடு அசைய விடும் காலம்
நான் மகிழ்வின் நிழல்கள் படரும் இருள் நிலமாவேன்.


கவிதைகள் வாசித்த குரல்:
மிருணா
Listen On Spotify :

About the author

மிருணா

மிருணா

கோவில்பட்டியைச் சொந்த ஊராகக் கொண்ட மிருணா, முதுகலை ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியம் படித்தவர். வாசிப்பிலும், எழுத்திலும் ஆர்வம் உள்ள இவரது எழுத்துக்கள் ஆய்விதழ்களிலும், சிறு பத்திரிக்கைகளிலும் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website