cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 16 கவித்துவம், கவிதை, கவிஞன் தொடர் கட்டுரைகள்

கவித்துவம், கவிதை, கவிஞன் [பாகம் 2]


யாருக்கெல்லாம் இயல்புகளை தம்மிடமும் பிறரிடமும் 

மறைத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளதோ 

அவர்களுக்கான கருவித்தான் 

தணிக்கை என்பது. 

–  சார்லஸ் புக்கோவ்ஸ்கி

(அமெரிக்க கவிஞர்)

ரு நவீனத்துவ கவிதைக்குள் கவித்துவம் என்கிற விஷயத்தை எப்படி அடையாளங்காணுவது? அது என்னவாக வேண்டுமானாலும் இருக்குமோ அல்லது இதுதான் இப்படித்தான் என்பதாக இருக்குமோ அல்லது இருக்க வேண்டுமோ? ‘கவித்துவம்’ என்கிற பேசுபொருளை ஒட்டி இதையெல்லாம் நானறிந்த ஒரு கோணத்தில் இருந்து தொட்டுப் பார்க்கலாம் என்று எனக்குப் படுகிறது. எத்தனை விதமான சாத்தியங்கள் இதில் இருக்கக்கூடும் என்பதான ஓர் உரையாடலாக முன்னெடுத்து போகப் பார்க்கிறேன். 

நவீனத்துவக்கவிதைகள் கருத்து சொல்லுவதில்லை. அல்லது சமூகக்கருத்து சொல்லுவதற்கு நவீனத்துவக்கவிதை தேவையில்லை. இப்படி சொல்லிவிடலாமா? அதற்கு வேறு வேலைகள் உள்ளன என்று டிக்ளேர் செய்துவிடுவோமா? கவிஞர் புற உலகில் கண் முன்னே நடக்கின்ற ஒரு சம்பவத்தைப் பார்க்கிறார். அது அவரை தொந்தரவு செய்கிறது. நிறைய கேள்விகளை எழுப்புகிறது. ஒரு தரிசனத்தின் வழியே தாம் அடைந்த மனப்போக்கை வெளிப்படுத்த நினைக்கிறார். கவிதையாக வடித்துவிடுகிறார். சற்றே பெருமூச்சு விட்டபடி ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை அதிலிருந்து விடுவித்துக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறார்.

இது இயல்பு. எழுதும் கலை கைவரப்பெற்ற யாராக இருந்தாலும் செய்வதுதான். ஆனால், நடந்த விஷயத்தின் மீதான தாக்கத்தை பகிர்ந்துகொள்ள தேர்வுசெய்துகொண்ட கருவி எது என்பதைப் பொருத்து இன்னபிற சமாச்சாரங்கள் இணைந்துகொள்ளும். முடிந்தவரையில் எதையுமே வாசகரிடமிருந்துதான் எப்போதும் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ர் அனுபவத்தின் பிரதிபலிப்பை கவிதைக்குள் உணர்ந்திடும் வாசகர், அதனைத் தன் அனுபவமாக உணரத் தொடங்குகின்ற புள்ளியில் அக்கவிதை சற்றே விரிவடைகிறது. சமூகம் சார்ந்த செய்திகள் யாவுமே எல்லாவித சாமானிய மனிதனுக்கும் அவனுடைய அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகத்தான் இருந்துவருகிறது. சமூகம் இயங்கும் விதத்தில் எல்லோருக்கும் அதில் கொஞ்சம் பங்கு உண்டு. உரிமை உண்டு. தார்மீக அக்கறைகள் உண்டு. கருத்துகள் உண்டு. அபிப்பிராயங்கள் உண்டு. அது ஒரு விளைவு. எல்லா விளைவுக்கும் பதில் விளைவும் உண்டு என்பது சாமானியனின் மேலோட்டமான அறிவு. அந்த அறிவின் மீது கல் எறிந்து பார்ப்பதற்கு கவிஞருக்கு ஒரு மெனக்கிடல் அவசியமாகிறது.  (அனைத்து படைப்பாளிகளுக்கும் இது பொருந்தும்).

அது என்ன மெனக்கிடல்? பார்ப்போம்.

அறம் குறித்த பிரக்ஞை, ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கைகள், நீதி பரிபாலனங்கள். இதெல்லாம் சதவிகித அளவில் ஆள் ஆளுக்கு மாறுபடும். யார் எதனை எந்த அளவில் நுகர்கிறோம் என்பதில் தொடங்கி மற்றவர் மீது எந்த அளவில் அவற்றைப் பிரயோகிக்கிறோம் என்பது வரையில் கணக்கில் சேர்த்தி தான். மறுப்பதற்கில்லை. [இங்கே லட்சியவாதம் பற்றி நான் பேசப் போவதில்லை. அது தனிநபர் தேர்வு சார்ந்ததும் அல்ல]. இப்படியாக, ஒரு தனி மனிதன் சமூகத்தின் பிரதிநிதியாக ஒரு தொகைமனிதனாக, பலவற்றின் சேர்க்கையின் விளைவில் ஒரு தொகுப்பு மனிதனாக இருக்கும்பட்சத்தில் அவனுடைய பார்வையில் உற்பத்தியாகின்ற கருத்து இருக்கிறது இல்லையா, அதுதான் இங்கே செய்தியே. இதையே நாம் Point Of View என்கிறோம். இந்த பாயிண்ட் ஆஃப் வியூ பற்றின ஆர்வம் நம்மில் பலருக்கும் உண்டு.

‘நீ என்ன நினைக்கிற?’ என்கிற கேள்வி கேட்கப்படாத இடம் இல்லை. கேட்கப்படாத விஷயம் இல்லை. அதைக்கொஞ்சம் ஆழம் தோண்டி பார்க்கலாம்.

அதற்கும் முன்னதாக, இங்கே ஒரு வரலாற்று உதாரணத்தை சொல்லலாம் என்று நினைக்கிறேன். இரண்டு நண்பர்கள் அர்ஜென்டீனாவிலிருந்து புறப்பட்டு முழு லத்தீன் அமெரிக்காவையும் மோட்டார் சைக்கிளில் சுற்றிவர முடிவெடுக்கிறார்கள். இருவருமே மருத்துவத்துறையை சார்ந்த மாணவர்கள். அந்தப் பயணவழி நெடுக அவர்கள் சந்தித்த மக்களிடையே நிலவிய பொருளாதாரம் சார்ந்த வாழ்வின் வித்தியாசங்களைப் பார்த்தார்கள். வறுமையை, நோய்க்கூறுகளை பார்த்தார்கள். பயணத்தின் முடிவில் ஒருவர் மருத்துவ சேவையின் உச்சம் நோக்கி தம் வாழ்வை அர்ப்பணிக்க முடிவெடுக்கிறார். இன்னொருவர் கண்ணால் பார்த்ததின் பின்னணியில் இருந்த அரசியலை நோக்கி முடிவெடுக்கிறார். வரலாற்றில் இரண்டு பேருக்குமே இடம் உள்ளது. பார்வையும் தேர்வுகளும் தனிநபர் சார்ந்ததுதான். அதன் தாக்கம் தலைக்குள் என்னவாக மோதுகிறது என்பதைப் பொறுத்துத்தானே விளைவும் இருக்கும். மருத்துவத்துறை என முடிவெடுத்தவர் ‘அல்பெர்டோ கிரானடோ’. அரசியல் என முடிவெடுத்துவர் ‘சேகுவேரா’. இருவருக்கும் நடுவே  அப்போது ஆறு வயது வித்தியாசம் இருந்தது. சேகுவேராவுக்கு பதினாலு வயது. அல்பெர்டோவுக்கு இருபது வயது. அப்போதே சேகுவேராவுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

இங்கு இது எதனால் சொல்லப்பட்டது என்றால், ஒரே விசிட்டில் குறைந்தபட்சம் இரண்டு Point Of View-கள் உருவாகும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. (Concept, கருத்து என்றுவரும்போது சமூகப்பிரக்ஞை என்கிற பிளாட்ஃபார்மில் நின்று பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை ஒரு தடவை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்).

இப்படியாக, பொதுவில் கண்டடைகின்ற கருத்துகள் வலியுறுத்தும் செய்தியை பதிவு செய்வது என்பது வேறு. கருத்துகளின் வழியாக ஒரு செய்தியை வலியுறுத்துவது என்பது வேறு. கவிதைப் படைப்பாக்கங்களில் ‘வலியுறுத்துவது’ என்பதே திணிப்பதாகிறது. எனவே கவிதைகளில் எதையுமே ஜஸ்ட் குறிப்புணர்த்தினால் போதுமானது. அப்பட்டமாக வெளிப்படுகின்ற கருத்துக்கள் பிரச்சாரத்தன்மையோடு ஒரு பிட்-நோட்டீஸின் சாயலோடு முடிந்தும் போகலாம். அதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக மட்டுமே எக்ஸ்ட்ரா மெனக்கிடல் தேவைப்படுகிறது. (இது கவிஞருக்கானவை).

விதையின் இயலில் கவித்துவம் சுவீகரித்துக்கொள்ள நினைக்கும் அம்சங்களில் ஒன்று Emotion என்கிற மைய உணர்ச்சி. இதுதான் கவித்துவத்திற்கான மையம் எனும்போது, இதற்கு முந்தைய அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்திருந்த உருவகம் மற்றும் படிமம் என்கிற இரண்டு எளிமையான அடிப்படைக்கருவிகள் உடனடியாக உதவி புரிந்திட முன்னுக்கு வந்து நிற்கும்.

இந்த ‘மைய உணர்ச்சி’ யை ஒரு நவீனத்துவக்கவிதைக்குள் அடையாளங்காண்பதற்கு வாசகரின் முதல் அட்டெம்ப்ட் என்னவாக இருக்கலாம்? எல்லாமே நம்மிடம் இயற்கையாக உள்ளவை தான். இங்கு எதுவுமே எடுத்த எடுப்பில் ஸ்பெஷல் கிடையாது. அதெல்லாம் அப்புறம் நிகழ்பவை. சரி, விஷயத்திற்கு வருவோம். ‘மைய உணர்ச்சி’ யை அடையாளங்காண்பதற்கு வாசகரின் உணர்வுநிலை என்கிற Mood முக்கியத்துவம் ஆகிறது. இது மனம் சம்பந்தப்பட்டதாக உள்ளது. எமோஷன் மனதில்தான் ரசவாதம் கொள்கிறது அல்லவா. ஆக, வாசகரின் உணர்வுநிலைதான் கண்முன்னே இருக்கும் நவீனத்துவக்கவிதைக்குள் கருப்பொருளின் எமோஷன் எது என்று அடையாளங்காணுகிறது. மனித மனம் மிகவும் நுட்பமானது என்று சொல்லப்படுவது இவற்றின் கூட்டிணைவின் விதிகளை (set of rules) வைத்துத்தான்.

உணர்வுநிலையைப் பற்றி பேசிவிட்டதால், உடலால் உணர்தல் மற்றும் நமக்கு வரமளிக்கப்பட்டிருக்கும் புலன்களால் உணர்தல் என்பதையும் பேசிவிடவேண்டும்தானே? உடல் & புலன்களால் உணர்தலையே Feelings என்கிறோம். இவை புறவயமானவை. உடலின்மீது அல்லது உடல் உறுப்புகளின் பங்கு இதில் இருப்பதனாலேயே புறவயமானவை. ஆக, Feelings புறத்திலிருந்து அகம் நோக்கிப் போகிறது. அதேவேளை அகத்தின் உணர்வுநிலை எமோஷனை வெளிப்படுத்தும்போது புறத்தில் விளைவுகள் உருவாகின்றன. அதாவது Physical ஆக.

ஏதோ பார்ப்பதற்கு சயின்ஸ் கிளாஸ் மாதிரி இருக்குதில்ல. ஆனால் வேறுவழியில்லை. இவை முக்கியமானவை. அடிப்படையானவை. எளிமையானவையும் கூட. இதை ரீ-கால் பண்ணாமல் கவித்துவம் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் பிரயோஜனம் இல்லாமல் போகலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம் ஆகும். அதுவே என்னுடைய பரிந்துரையும் கூட.

Feelings – உடல் & புலன்களால் உணர்தல்.

Mood – உணர்வுநிலை.

Emotion – மைய உணர்ச்சி.

இப்போது இந்தத் தலைக்கீழ் வரிசை பளிச்சென்று புரிந்துவிடும். இவையாகத்தான் நாம் நம் அன்றாட வாழ்வில் இருக்கிறோம். பிறரோடு நட்போ பகையோ பாராட்டுகிறோம். காரணங்களை கண்டடைகிறோம். விஷயங்களின் மையத்தை நியாயப்படுத்துவதற்கு புதிய காரணங்களை உற்பத்தி செய்கிறோம். அவற்றையே ஒரு தத்துவமாக உருமாற்றிவிடத் துடிக்கிறோம். மனித மனம் இப்படியாகத்தான் உளவியலாக Evolve ஆகிக்கொண்டே இருக்கிறது. 

அதேபோல ஒரு நவீனத்துவக் கவிதையானது ஒரு சாமானிய வாசகராகிய நம்முடன் இயைந்து போவதற்கு அதனுள்ளேயும் இதே அடுக்குகள் வேலை செய்கின்றன. மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ அவை அதனுள்ளே இருக்கின்றன. மேலே, முன்னதாக சொல்லியதை இங்கே மீண்டும் நினைவுகூருகிறேன்.

தனிமனிதனின்-

அறம் குறித்த பிரக்ஞை / ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கைகள் / நீதி பரிபாலனங்கள்.

இவை ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ தூண்டுகின்றன. வாசகர் பற்றுள்ளவர் என்று வைத்துக்கொண்டால், எதன்மீதெல்லாம் பற்று மிகுந்திருக்கிறதோ அதன் அடிப்படையில் அவருடைய கருத்தாக்கம் வெளிப்படும். ஒத்துப்போகின்ற கருத்தாக்கங்களை எங்கெல்லாம் அடையாளங்காணுகிறாரோ அவற்றைக் கொண்டாடி களித்திடுவார். ஒத்துவராத கருத்தாக்கங்களை உள்ளடக்கமாக கொண்டிருக்கிற எதையும் சுலபமாக நிராகரித்துவிட்டு விலகி போய்விடுவார்.

தன்னுள் நிகழ்வதுதான் வெளியே ஒரு படைப்பிலும் நிகழ்ந்துள்ளது எனும்போது வாசகர் ஒரு நவீனத்துவக் கவிதையுடன் மனத்தை ஒருங்கிணைத்து பயணம் செய்யத் தயாராகிவிடுகிறார்.

னி என்னுடைய ஒரு கவிதையை அனலைஸ் செய்து பார்ப்போம். இந்தக் கவிதையை 2009-ல் எழுதினேன். அப்போது ஆர்குட்டில் பகிர்ந்துகொண்டேன்.

 

நிழல் தவிப்பு

 

உச்சி வெயில் அலையும்

அகன்ற மைதானத்தில்

 

கொடியற்ற கம்பத்தின்

அடி நிழலை

 

தவிப்போடு

சுற்றிக்கொண்டிருக்கிறது

ஒரு

சிறு எறும்பு

 

 

ஒரு காட்சி.

கண் முன் பெரிய மைதானம் விரிகிறது.

பொழுது உச்சி வெயில். ஆனால் அந்த வெயில் அலைகிறது. எங்கே?

பரந்த மைதானம் எங்கும் அலைகின்ற உச்சி வெயில் அது.

கொடி இல்லாத ஒரு கம்பம். அதன் அடியில் கொஞ்சம் நிழல்.

அந்த நிழலில் தவிப்புடன் சுற்றிக்கொண்டிருக்கிற ஓர் எறும்பு.

இந்தக் கவிதையின் மைய உணர்ச்சி (Emotion) எது?

ஒரு சிறிய உயிரின் இருப்பு.

உணர்வுநிலை (Mood) என்னவாக இருக்கிறது?

அந்த உயிரின் தவிப்பாக இருக்கிறது.

அகன்ற மைதானம் X சிறிய உயிர் –என்கிற எதிர்நிலையின் துணைக்கொண்டு வாசிக்கும் மனம், உச்சி வெயில் நகர்ந்திட நகர்ந்திட தாமும் தவிப்பு நிலைக்குத் தள்ளப்படலாம்.

இந்தக் கவிதையில் ஒரே ஓர் உருவகம் மட்டுமே உள்ளது.

உச்சி வெயிலின் ‘அலைதலாக’ அது உள்ளது.

வாசக மனதின் வாழ்வில் எங்கோ எதிலோ, எப்போதோ கைவிடப்பட்ட நிலை ஏற்கனவே அனுபவப்பட்டிருக்குமேயானால் இங்கே உணர்வுநிலை பொருந்திப் போகும். அப்படிப்பார்க்கும்போது ஒட்டுமொத்த கவிதையுமே ஓர் உருவகமாக வாசிப்பு மனத்தில் சேகரமாகும் ஒரு சிறிய சந்தர்ப்பம் உள்ளது. கவிதை வெறும் காட்சி விளக்கமாக அல்லாமல், அதனுள் கவித்துவமாக வனைந்து வைத்திருப்பது ஒரு திக்கற்ற நிலையையும் அதற்கு பின்னான ஒரு நம்பிக்கையையும் தான். உச்சிவெயிலின் அலைச்சலே கூட எறும்புக்கு உதவிடவே தவிக்கிறது. அதனால்தான் அது கொடியற்ற அந்த ஒற்றைக்கொம்பின் சிறு நிழலை விட்டுவிட்டு செய்வதறியாமல் அலைந்துகொண்டிருக்கிறது. துயர் பொழுதை சூழ்ந்துவிட்டிருக்கும் பரந்த வெப்பம் நகர்ந்து நகர்ந்து நிலைமை தணிந்திட காத்திருக்கத்தான் வேண்டும்.

 

இன்னொரு கவிதை. இதுவும் 2009-ல் எழுதியது. ஆர்குட்டில் பகிர்ந்துகொண்டது.

 

நீர்க்குமிழியில்..

 

வண்ணங்கள் பூசிக்கொண்டு

பறந்த

சோப்பு நீர்க்குமிழியில்

 

ஆசையோடு

சிறிது தூரம் பயணித்தது

 

சிறுமியின் மூச்சுக்காற்று

 

கவிதையின் கடைசி வரியால், அதுவரையில் வெறும் காட்சி போன்றிருந்தது மொத்தமாய் படிமமாகிவிட்டது.

மூச்சுக்காற்றின் பயணம் உருவகமாக உயர்ந்துள்ளது.

கவிதையின் மைய உணர்ச்சி (Emotion) எதுவென அடையாளமாகிறதா?

நீர்க்குமிழி போலத்தான் இந்த வாழ்க்கை என்கிறது மைய உணர்ச்சி.

அத்தனை வண்ணமயமாகவும் இருக்கிறது.

சிறுமியின் ஆசையோடு அது பயணிப்பதே கவித்துவத்தின் உணர்வுநிலை (Mood).

மூச்சுக்காற்று தான் கவிதையின் சாவியாகிறது. வாசிப்பனுபவத்தின் கதவுகளைத் திறந்துகொள்ள அதுவே உதவுகிறது.

இந்தக் கவிதையில், சிறுமியின் மூச்சுக்காற்றின் வழியாக ‘உயிர்’ உருவகமாக உயர்ந்தெழுகிறது. கவித்துவத்திற்குள் சிறு இழை போன்ற தத்துவத்தை கீறி வைத்துவிடுகிறது. ஆனால் அது மேலோட்டமாக கண்ணுக்கு எங்கு வேண்டுமென்றாலும் சிக்கிவிடுகிற சிறிய காட்சிப் போலவே இருந்தாலும், கவிதையான விதத்தில் அது தம்முடைய Point Of View –ஐ பன்முகப்படுத்துகிறது.

Emotion, Mood & Feeling: இம்மூன்றையும் தீவிரப்படுத்துவதின் வழியாக ஒரு நவீனத்துவக்கவிதை தம்மை இன்னும் கொஞ்சம் முன்னே நகர்த்திக்கொண்டுவிடும். பின்னர், அவற்றில் அடர்த்தியான கவிதைகள் வெளிப்படவும் தொடங்கும். புரிதல் என்பது சுலபமான ஒன்றுதான். அவற்றை நாம் ஏதோ ஒரு புள்ளியில் தொட்டு உணர்ந்துகொள்ளும் வரை அதுவுமே நமக்காகக் காத்திருக்கும்.


 

About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
3 Comments
Inline Feedbacks
View all comments
சிவரஞ்சனி

கவிஞரிடம் ஒரு சந்தேகம் கேட்கவேண்டியுள்ளது. நவீனத்துவ கவிதைகள் சமூக அவலநிலை, சமூகத்தை பேச வேண்டியதில்லை என்பதாக எழுதி உள்ளீர்கள். என் சந்தேகம் சமூகத்தை பற்றி எழுதும் ஒரு கவிதை நவீனத்துவ கவிதையிலிருந்து விலக்கப்படும் என்கிறீர்களா ? நவீன கவிதை ஏன் சமூகத்தை, அரசியலை நேரடியாகவே பேசக்கூடாது, குறிப்புணர்த்தால் தான் நவீனத்துவக் கவிதை என அறுதியிட்டு கூறிவிடமுடியுமா ? இவை எல்லாம் என் சந்தேகங்கள் மட்டுமே. புத்திவீக்கம் அல்ல :) நிவர்த்தி செய்வீர்கள் என் சந்தேகத்தை…

சிவரஞ்சனி

வணக்கம் கவிஞரே! சில நாட்களாக இணையதளத்திற்கு வரவில்லை. சந்தகேம் தீர்ந்தது. மிக எளிமையாக புரிய வைத்துவிட்டீர்கள். அடுத்த பாகம் படித்துவிட்டு எழுதுகிறேன்.

You cannot copy content of this Website